11.காதல்

காதல்

காதல் என்பது குறித்து இவர்களிடம் கருத்துக் கேட்டால் என்ன பதில் கூறுவார்கள் என்று கற்பனை செய்த போது வந்தது இது. மற்றபடி யாரையும் புண்படுத்துவதற்காக‌வோ, கேலி செய்வதற்காகவோ இல்லை எனப‌தினை ஆரம்பத்திலியே சொல்லிக்கொள்கிறேன். அத்துமீறலாக உணர்ந்தால் மன்னித்துக் கொள்ளவும்.


முதலில் அரசியல் வாதிகளிடமிருந்து ஆரம்பிப்போம்.

கலைஞர்:
காதல் என்பது காத‌லியின் மனக் கோட்டையிலே முதல்வராக அமர்வது. அத‌ற்காக‌ கலர் லிப்ஸ்டிக், கலர் சேலை போன்ற‌வ‌ற்றை இலவசமாகத் த‌ருவதாக‌ அறிவிக்கலாம்.காதலிக்க வேண்டுமானால் கூட்டு சேர்ந்துக் கொள்ளலாம். ஆனால் மனதில் இடம் பிடிக்கும் போது கூட்டாட்சிக் கூடாது.

ஜெயலலிதா:
காதலில் வெற்றித் தோல்வி என்பது சகஜம். தோற்றாலும் நாம் காதலரை சந்தித்த நாட்களின் சதவிகிதத்தை கணக்குப் போட்டுப் பார்த்தால், வெற்றி பெற்றவரை விட அதிகமாகத்தான் இருக்கும். அதற்காக யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். அப்படி இது வரை காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் கட்சி நிதியிலிருந்து அளிக்கப் படும்.

வை.கோ:
எப்படியும் சட்ட சபையில் சாரி! சாரி! மனதில் இடம் பிடித்திட வேண்டும் என்று, அவர்கள் கொடுத்த இன்னல்களை எல்லாம் மறந்து சரண் அடைந்து விடுவதுதான் காதல். அதற்காக மேடைப் போட்டு பேசி பேசியே ஆதரவு திரட்டலாம்.

விஜயகாந்த்:
ஒரே ஒரு மனதில் இடம் பிடித்திருந்தாலும், நம்மை தேர்வு செய்தவர்களுக்காக உழைத்து அவர்கள் வள‌ர்ச்சிக்குப் பாடுபடுவதே காதல். அவர்கள் மனதில் கேப்டனாக இடம் பெற எப்படி நடித்தலும் பரவாயில்லை.

அடுத்து திரைப்படத்துறையினர்

பாரதிராஜா:
என் இனிய தமிழ் மக்களின் மண்வாசனை. கல்லுக்குள் உண்டகும் ஈரம். 16 வயதினிலே ஏற்படும் கடலோர கவிதைகள். சிகப்பு ரோஜாக்களை கொடுத்து, தாஜ்மஹாலை வளைக்கும் மந்திரம். புதிய வார்ப்புகளின் வாலிப விருந்து.புது நெல்லுக்கும் புது நாத்துக்கும் உள்ள உறவு.

விஜய T.ராஜேந்தர்:
ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவது காதல்
ஆரம்பமாகும் இடமோ இருவரின் மோதல்
அது கைக் கூடவில்லை எனில் சாதல்
அல்லது இருவரும் இணைந்து ஒருவராய் ஆதல்.

ரஜனிகாந்த்:
இது பற்றி இப்போது எதுவும் கருத்து சொல்லக் கூடாது. சிவாஜி படம் முடியும் வரை எதையும் பேச விரும்பவில்லை. அதற்குப் பிறகு இமயமலை அடிவாரம் சென்று ஓய்வெடுத்து லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக கருத்தைச் சொல்கிறேன்.

கம‌ல்:
காதல்‍. ஒரு நல்ல விஷயந்தான். அது மருதநாயகம் மாதிரி ஜவ்வாக இழுத்துக்கொண்டு இருக்கவும் கூடாது, மும்பை எக்ஸ்பிரஸ் மாதிரி வந்ததும் தெரியாமல் போவதும் தெரியாமல் போகவும் கூடாது. காதல் பெயரில் ஏற்கனவே திரைப்படம் வந்து விட்டதால் அந்த சப்ஜட்டுக்கு ஏற்ற பிரச்சனை ஏற்படுத்தாத தமிழ் தலைப்பு தேடிகிட்டு இருக்கிறேன். அது கிடைத்ததும் துவக்க விழாவுக்கு டோனி பிளேயரை அழைக்கலாமென்று இருக்கிறேன்.

சிம்ரன்:
காதலுக்கு எல்லாரும் ஓட்டுப் போடுங்கோ. நான் இன்னும் அம்மாவைத்தான் லவ் பண்ணுது. எங்க அம்மாவை இல்லே, ஜெயா அம்மாவை.காதல் சின்னமாக ஹார்ட்டை எடுத்துட்டு ரெட்டை இலையை வச்சா , விரல காமிச்சு ஓட்டு கேட்க ஈஸியா இருக்கும்.

குஷ்பு:
திருமணத்திற்கு முன்பு பெண்கள் காதல் செய்வது த‌ப்பு, த‌ப்பு,மகா தப்பு. (ச‌ரின்னு சொல்லி, இதுக்கும் கோர்ட் கேஸுன்னு நம்பலால அலைய முடியாதுப்பா. ஆள விடுங்க)

வைரமுத்து:
அது ஓர் இனிய அனுபவம்.
அது இளமையின் வைபவம்.
கரிசல் காட்டின் காவியம்.
தண்ணீர் தேசத்து ஓவியம்.

சுஜாதா:
ஆணின் மூளை யிலுள்ள நியூரான்களில் ஒரு குறிப்பிட்ட பெண்ணைக் கண்டதும் சுரக்கும் ஒருவித chemicalலினால் ஏற்படும் மின் அதிர்வே காதல்.


பேச்சாளர்கள்

சாலமன் பாப்பையா:

வாங்க அப்பு! "காதல்" நல்ல அருமையான தலைப்பத்தான் கொடுத்திருக்காக. காதல்- இனக்கவர்ச்சியா, மனக்கவர்ச்சியான்னு நம்ம ராஜாவையும், பாரதி பாஸ்க‌ரையும் வச்சி ஒரு பட்டி மன்றம் நடத்தி பொங்கல் அன்னைக்கு சன் டீவில போட்டுடலாம்.


சுகிசிவம்:
காதல் ஒரு புனிதமான சங்கதி. நமது புராணங்களிலே பல இடத்தில் பேசப்படுவது. உங்களுக்கு சுலபமாக புரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் கேளுங்க! முருகனுக்கு பெற்றோர் பார்த்து தேவயானியை திருமணம் செய்து வைத்தார்கள். அது arranged marriage ஆனால் முருகன் வள்ளியை காதலித்து மணந்து கொண்டார். இதிலிருந்து நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா உங்களுக்கு.

Mr.(சென்னை)பொது ஜனம்:
என்ன கஸ்மாலம் அது மாமூ ! ஐய்ய, லவ்வைப்பத்தி கேட்டுகினியா. அப்படி புய்யும் படியா தமிழ்ல‌ கேளு நயினா! லவ்வுன்னா ஃப்கரை டாவு அடிச்சிகினு, கடல போடுறதான் மச்சி. சப்பமேட்டரு!இதுக்குப் போயி மீனிங் கேட்டுகினு கீற!

வலைப்பதிவாளர்களை மட்டும் விட்டு வைப்பானேன்.

டோண்டு:
காதல் என்று கூறிக்கொண்டு பின்னோட்டத்தில் வருகிறவர்களில் போலியின் தொல்லைத் தாங்க முடியாது. இந்த போலிகளை அடையாளம் கண்டு கொள்ள பூனைக் குட்டி சோதனை உள்ளது.அதனை தெரிந்து கொள்ள கீழ்கண்ட url கிளிக் செய்யவும்.
http://poonaikuty_soothani/dontoo. html

மாயவரத்தான்:
காதலிப்பவர்களின் வேதனைகள் தொடங்கி விட்டது. காதல், காதல் என்று சொல்லிக் கொண்டு சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர்களின் லீலைகளைப் பற்றி தின மலரில் வரும் செய்திகளை உள்குத்து இன்றி நடு நிலமையாக விமர்சித்து பதிவு இடுவேன்.காதல் செய்யும் போது கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் திருமணம் ஆன பின் நிறைவேற்றுகிறார்களா என பார்க்கவேண்டும்.

(இனியதளம்) கோகுல் குமார்:
காதல் செய்பவர்களுக்கு வசதியாக, காதல் மின்கடிதம் எழுதவும், காதலியை யாருக்கும் தெரியாமல் சந்திக்கும் தந்திரங்கள் பற்றியும் இந்த தளத்தில் இலவசமாக ஆலோசனைகளைக் காணலாம்.

காசி ஆறுமுகம்:
காதல் பற்றி தெரியாதவர்களுக்கும், புதிதாக முத‌ன்முதலில் காதலிப்பவர்களுக்கும் வசதியாக, " உன் பாடு, என் பாடு, நம் அப்பன் பாடு" "தமிழில் காதலிக்கலாம் வாருங்கள், வலையில் சிக்கலாம் பாருங்கள்"என்ற நகைச்சுவையும், நுட்பமும் அடங்கிய கட்டுரைகளைக் காண இங்கே 'கிளிக்'கவும்.

துளசி கோபால்: காதல் part-1
நியூசிலாந்தில் முன்பு அங்குள்ள ஜோடிகள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் ஆங்கில வார்த்தையின் தமிழ்ச் சொல்அது. இப்படித்தான் ஒரு முறை நாங்கள் காரில் சென்று கொண்டு இருக்கும் போது எதிரில் ஒரு கார் வேகமாக எங்களை கடந்து சென்றது. பார்த்தால் அந்தக் காரிலும் ஒரு ஜோடி. அவர்களும் காதல் ஜோடியாகத்தான் இருக்கவேண்டும். எங்களை கடந்து சென்ற கார் திடீரென நின்றது.
(காதல் part-2 அடுத்த பதிவில்)

கோபி (Gopi) :
காதலர்கள் ப‌ரிமாறிக்கொள்ளும் கடிதத்தில் இருக்கும் fontஐ unicodeல் மாற்றி வாசிப்பத‌ற்கான Toolஐ எனது ப்ருந்தாவனத்தில் காணலாம்.

நாமக்கல் சிபி:
நயன்தாராவிடம் கருத்து கேட்க்கப்படாததினால், நானும் கருத்து கூறப் போவதில்லை.

(எண்ணச்சுவடி) மதி:
மெய்ப்பொருள் காண்பது அறிவு 14(Feb)
காதல் என்பது திருமணம் செய்துக் கொள்ளத்தானே."கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்" என்ற பழமொழி நாம் நினைப்பதைப் போல திருமணத்தை நாமே செய்து கொள்ளவோ அல்லது திருமணத்தை நாமே நடத்திப் பார்க்க வேண்டும் என்பதோ அல்ல. மற்றவர்கள் கல்யாணம் ப‌ண்ணிக் கொள்வதை, தூர இருந்து பார் என்பதே சரியாக இருந்திருக்கும்.

ஜெயக்குமார்:

"........................................"(posting deleted) வந்த comment போலியினுடையது என்று ஒரிஜினல் ஜெயக்குமார் புகார் கூறியதால் நீக்கப்பட்டது.

10.மெய்ப்பொருள் காண்பதறிவு - 3



மெய்ப்பொருள் காண்பதறிவு - 3


"பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து" என்ற பழமொழியை திருமண வீட்டில் அடிக்கடி கேட்டிருக்கலாம்.
எங்கே கடைசி பந்திக்குப் போனால் ஜாங்கிரியும், மைசூர்பாகும் தீர்ந்து விடப் போகிறதோ என்ற கவலையும்; ரசமும்,மோரும் தீரத் தீர, நீர்த்துப் ( தண்ணீர் விட்டு பெருக்கிக்கொள்வதால்) போய்விடும் கவலையிலும் முதல் பந்திக்கே போய் விட்டால் அனைத்தையும் ஒரு பிடி பிடித்து விடலாம் என்போரின் தாரக மந்திரம் அது.

ஆனால் நினைத்துப் பாருங்கள், விருந்தோம்பலில் புகழ்பெற்ற நம் தமிழ் நாட்டில், அதுவும் தமிழகம் செழித்திருந்த அந்த காலங்களில் இப்படி ஒரு கருத்தையா சொல்லியிருப்பார்கள்?

ஒரு திருமணத்திற்குச் சென்ற எனக்கு இரு அனுபவங்கள் ஏற்பட்டது. மணமகன் தாலி கூட கட்டவில்லை, இலை போட்டாயிற்று என்று ஒருவர் சொன்னதுதான் தாமதம். திமுதிமுவென்று ஒரு கூட்டம் அடித்து பிடித்துக் கொண்டு ஓடி இடம் பிடித்தது சாப்பிட. விசாரித்தபோதுதான் அவசரத்திற்கான காரணம் புரிந்தது. திருமணம் முடிந்து அவர்களுக்கு அலுவலகம். பள்ளி செல்ல வேண்டியிருந்ததால் சீக்கிரம் வந்த வேலையை முடித்துக்கொண்டு புறப்படலாமே என்பதுதான்.

நமக்கு அப்படி ஒன்றும் வெட்டி புரட்டும் வேலையில்லாததால் மெதுவாக சாப்பிட செல்லலாமென அமர்ந்து வேடிக்கை (?) பார்த்துக் கொண்டிருந்தேன்.
அடுத்த பந்திக்காக சாப்பிட கூப்பிட வந்தவர்,"சாப்பிடாதவங்க வாங்க! அடுத்த பந்தி ரெடி!" என்று கூறிவிட்டு, எனக்கு தெரிந்தவர் ஆதலால், "வாங்கண்ணே! இலை போட்டாச்சு" என்றார் என்னைப் பார்த்து.

எனக்கு பக்கதில் இருந்தவரும் அவருக்கு தெரிந்தவர் போலிருக்கிறது. அவரையும்,"மாமா எந்திரிங்க, சாப்பிட போகலாம்" என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். நான் எழுந்து அவரையும் கூப்பிட்டு விட்டு அதற்கு அடுத்தாற் போல உட்கார்ந்திருந்த பெரியவரையும், "வாங்க போகலாம்" என்று அழைத்தேன்.

உடனே அவர் "நான் என்ன சாப்பாட்டிற்கு இல்லாமல் இங்கு வந்தேன் என்று நினைத்துக் கொண்டீர்களா?" என்றார் கோபத்தில்.
"என்ன தாத்தா இப்படி பேசறீங்க? சாப்பிட வாங்கன்னுதானே கூப்பிட்டேன்!" என்றேன்.
"நீ கூப்பிட்டா சரியா போச்சா? இங்கே வரிசையிலே நாம மூனுபேரும் உட்கார்ந்திருக்கோம், இப்ப வந்த ஆளு உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டுவிட்டு, குத்துக் கல்லாட்டம் உட்கார்ந்திருக்கிற என்ன கண்டுகாத மாதிரி போறான். 'வாங்க தாத்தா சாப்பிடலாம்னு' ஒரு வார்த்தை மரியாதைக்கு என்னையும் கூப்பிடமப் போறான் பார்த்தேல்ல." என்றார் வெகு ஆவேசமாக. அவரை சமாதனப் படுத்தி சாப்பிட வைக்க நான் படாத பாடு பட வேண்டி இருந்துது.

இந்தப் பெரியவருக்கே இப்படி கோபம் வருகிறதே! அலுவலக்த்திற்கோ, பள்ளிக்கோ அடித்துப்பிடித்துக் கொண்டு போக வேண்டிய அவசரமில்லாத அந்தக்காலத்தில் பந்திக்கு முந்திக்கொண்டா போய் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள்?


ஒரு வீட்டில் திருமணம், விசேஷம் என்றால் இப்போது வெகுசுலபமாகப் போய் விட்டது. அனைத்திற்கும் ஒப்பந்தக்காரர்கள் உண்டு. ஒரு மண்டபத்தை ஏற்பாடு செய்து விட்டு ஒப்பந்தக்காரரிடம் பணத்தையும் கொடுத்துவிட்டால் கையைக் கட்டிக் கொண்டு கக்கத்தில் பணப் பையை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தால் போதும். சாப்பாடு, சமையலிலிருந்து Table Cleaning வரை எதெற்கெடுத்தாலும் அதற்கு ஆள் உண்டு. அதுவும் இப்போது இருந்த இடத்திலிருந்தே தொலைப்பேசியை அழுத்தினால் போதும், அனைத்திற்கும் ஆள் ரெடி.

முன்பு அப்படி இல்லை. எவ்வளவு பெரிய விசேஷமாக இருந்தாலும் வீட்டில்தான். திருமணம் என்றால் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல தெருவில் உள்ள அனைவரும் ஆளுக்கொரு வேலையை எடுத்துக் கொண்டு செய்வார்கள். அப்போதுதான் அந்த விருந்தை சிறப்பாக செய்து முடிக்க முடியும்.

பந்தி ஏற்பாடு செய்யவேண்டுமானால் முதலில் இலை நறுக்கி, இலைப்போட்டு, இருக்கைப் போட்டு SIDE DISH களை பரிமாற வேண்டும். வீட்டில் உள்ளவர்களால் மட்டும் இதை செய்து கொண்டிருக்க
முடியுமா? அதற்கு மற்றவர்கள் முன்னால் சென்று உதவ வேண்டும்.

இந்த 'தானே சென்று உதவும்' பண்பு தேவை என்பதற்குத்தான் "பந்தியிலே முந்தி" இருந்து பரிமாற வேண்டும் என்று கூறப்பட்டிருக்க வேண்டும்.

அது சரி, "படைக்கு பிந்து" என்பதில் வேறு என்ன கருத்து இருக்க முடியும்?
படையெடுப்பு என்றால் வீட்டுக்கு ஒருவரை வாழ்த்தி திலகமிட்டு அனுப்பும் வீர பரம்பரை அல்லவா நம்முடையது. வீரம் என்பது ஆணின் அழகுக்கு இலக்கணமாக கூறிய சமுதயம் அல்லவா? பின் ஏன் படைக்கு பிந்த வேண்டும்?

படைகளில் பல பிரிவு உண்டு. அதில் முன்னர் செல்வது காலாட்படை. அதைத்தொடர்ந்து குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை எனச்செல்லும். முதலில் செல்லும் காலாட்படையில் ஆட்கள் அதிகம். அவர்கள் எதிரியால் தாக்கப்பட்டாலும், பின்னர் வரும் தேர்படைகளில் இருக்கும் வீரர்கள் வெற்றி வாகையினைத் தேடித்தருவார்கள். தேர்படையில் இடம் பெற பல போர்களைக் கண்டு, வீரத்தை நிறுபித்து இருக்க வேண்டும்.
சாதரண வீரர்களுக்கு அதில் இடமில்லை.

நாம் காக்கைக்கு சோறு போட்டு சோதித்து விட்டு சாப்பிடுவதில்லையா?
சாப்பாட்டில் விஷமிருந்தால் தெரிந்து விடும். காக்கையை விட நமது உயிரை மேலாக மதிப்பதினால் தானே அப்படி செய்கிறோம். அது போல வெறும் 'காக்கை வீரர்களாய்', 'வெறும் காலாட்படை' வீரனாக இருந்தால் மட்டும் போதாது, வீரத்தையும் திறமையையும் காண்பித்து பின்னால் வரும் தேர் படைகளில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை குறிப்பதே "படைக்குப் பிந்து" என்பது.

இதிலிருந்து அந்த பழமொழியின் உண்மையான பொருள், தற்போது நாம் நினைப்பது போல் இருந்திருக்காது என்பது தெரிகிறது அல்லவா!

09.மரக் கோலங்கள்

மரக் கோலங்கள்
மனிதர்களில்தான் உருவத்தில் ஒருவருக்கொருவர் அதிகமாக வித்தியாசப் படுவார்கள். மிருகங்கள் தாவரங்களில் சிறிதளவு வித்தியாசம் தான் காணப்படும் என்றுதான் நினைத்திருந்தேன்.

பாருங்களேன் இந்த மரங்களின் கோலத்தை!

இயற்கை வரைந்த கோலங்கள் இவை.

(பார்த்ததில் பிடித்தவை.வலைகளில் சுட்டவை)









08.எது சைவம்?

எது சைவம்?


(நன்றி: தினகரன் 09-06-2006)

ஆகா வந்திருச்சி! மீனும் சைவத்திற்கு வந்திருச்சி!!.
அப்படி பார்க்காதிங்க! நான் உளறலங்க. நம்ம ம.பி. அமைச்சர் மோதி சொல்லியிருக்காருங்க. ஆமா முட்டையை சைவத்தில சேர்த்தாச்சாமுள்ள. யாரும் சொல்லவே இல்ல!
WAIT பண்ணுங்க, இன்னும் கொஞ்ச நாள்ல நர மாமிசமும் சைவத்துக்கு வந்துடும்.


பொய்யில்லீங்க. அமைச்சர் சொல்லியிருக்கிற காரணத்தப் பாருங்க புரியும். இனப்பெருக்கம் செய்யாத்தினால இறால் சைவம்னா, குழந்தை இல்லாதவங்க கொஞ்சம் பேர் இருக்கங்கள்ள, அவங்களத்தான் சொனேன்.


இனி குஞ்சு பொரிக்காத, குட்டி போடாத, முட்டையிடாத எல்லாத்தையும் சைவமாக்கிட்டாங்கன்னா புண்ணியமாப் போகும்.


செடியல்லாம் விதை மூலம் இன்ப்பெருக்கம் செய்யுதே, அப்படின்னா அதெல்லாம் அசைவமா?


எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்.

எது சைவம்?

உயிர் இல்லாத பொருள்களா?

அப்படின்னா கீரை,செடி,கொடிக்கெல்லாம் உயிர் இல்லையா?


நண்பர் சொன்னார்,"அவைகளுக்கு வலியை பிரித்தறியும் அறிவு இல்லாததால அவை சைவமாம்.
அப்போ வலி தெரியாததெல்லாம் சைவம்ன்னு வச்சிக்கிட்டா ,செத்துப்போனதெல்லாம் சைவமா?
LOGIG எங்கியோ இடிக்குதே.


பாலை சைவமா ஏத்துகிட்டு இருக்கோம், அதே உடலிலே ஓடும் ரத்தம் அசைவமாகிறது.


யாருக்காவது சைவ, அசைவ உணவுக்கான விளக்கம் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன். (தமிழ் களஞ்சியத்ல இருக்குதா?)

"ம்.! ஓடு.....! ஓடு.....! முட்டையை கடிச்சு,

இறாலைக் கடிச்சி, நம்மையும் கடிக்க
வந்திடப் போறாங்க."



07. திறமை???

(நன்றி தினமலர் 8/6/2006)




திறமை???

பத்தி எரியுது, பத்தி எரியுது பட்டப் படிப்பினிலே
பாதி இட ஒதுக்கீடு பிரச்சனை,
கத்தி கத்திப் பார்த்து விட்டு மாணவர்கள்
சத்தமின்றி செத்தபின்பும்
மத்தியிலும் மாநிலத்திலும் வைத்தனர்
மீண்டும் வேட்டு, வோட்டுக்காக,
சத்தியமாய் சொல்கிறேன் ஜாதியினி அழியப்போவதில்லை
வீதிப் பெயர்களில் நீக்கிவிட்டாலும்


திறமைக்கில்லை இனி மதிப்பு - குடி
பிறப்பினுக்கே இங்கே சிறப்பு.
மதிப்பெண் பெற்றோருக்கில்லை
மருத்துவ பட்டப் படிப்பு.
ஜாதி சான்றிதழுக்கே செல்லுமிடமெல்லாம் வரவேற்பு

06.மெய்ப் பொருள் காண்பதறிவு - 2


மெய்ப் பொருள் காண்பதறிவு - 2

"களவும் கத்து மற" இந்தப் பழமொழியை பல நேரங்களில் நாம் சொல்லியிருப்போம். ('கற்று' என்பது 'கத்து' என்று பேச்சுவழக்கில் சொல்லப்படுகிறது). முக்கியமாக மாணவர்களிடம், அவன் வேண்டாம் என்று சொல்லும் சப்ஜெக்டை படிக்க வைக்க டானிக்காக இந்த வார்த்தைகளைப் பயன் படுத்துவோம். ( அதே சமயம் அவன் வேண்டாத பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் போது நாம் தண்டிக்கப் போனால் அவனும் அதே அஸ்திரதைப் பயன் படுத்தி தப்பிக்கவும் பார்க்கலாம்).

நாம் புரிந்து கொண்டிருக்கும் பொருள்,"திருட்டுத் தொழில் இழிவானது, என்றாலும் அதனையும் கற்றுக் கொள்ள வேண்டும், பிறகு மறந்துவிட வேண்டும்" என கற்றுக் கொள்வதின் சிறப்பினை விள்க்கும் பழமொழியாகத்தான்.


களவு இழிவானது என்றுத் தெரிந்தும் ஏன் அதனை கற்க வேண்டும்?

கற்றலைப் பற்றி சொல்ல வந்த வள்ளுவர் "கற்பவை" என்று கற்க வேண்டியதை மட்டும் கற்க என்றார். பின் "நிற்க அதற்கு தக" என்றுதான் கூறினார். மறக்கச் சொல்லவில்லை. அதோடு மட்டுமல்லாமல் "கள்ளாமை" பற்றி ஒரு அதிகாரமே எழுதியுள்ளார்.


என்வே இழிவான, தேவையில்லாத ஒன்றை ஏன் கற்க வேண்டும், பிறகு அதை மறக்க வேண்டும்?


சாதரணமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று படித்தாலே நாம் எந்த லட்சணத்தில் படிக்கிறோம் என்று தெரியும். இதில் மறந்திட வேண்டும் என்று படித்தால் எப்படி?

எனவே அதன் உண்மைப் பொருள் "களவு அகத்து மற" என்றுதான் இருந்திருக்க வேண்டும். அதாவது களவினை மனதளவில் (அகம்) நினைத்துக் கூடப் பார்க்காதே, மறந்துவிடு என்பதாகும்.

மற்ற கூடா ஒழுக்கங்களான 'கொலை', 'பிறன் மனை நோக்குதல்', 'சூது', 'மது'போன்ற பழிச்சொல் ஏற்பவற்றில் களவும் ஒன்று, அதனையும் மறக்க வேண்டும் என பொருள் படும் படி "களவும் அகத்து மற" என மாறி, பின் காலப்போக்கில் 'அ' மறைந்து தற்போதய வடிவமான "களவும் கத்து மற"என மாறியிருக்கலாம்.

ஒரு காற்புள்ளி இடம் மாறியதனால் பொருள் எதிர் மறையாகி ஒரு உயிரே பறிபோன கதை ஞாபகம் இருக்கிறதல்லவா? மறந்தவர்களுக்காக அக் கதை மீண்டுமிங்கே:


ஆங்கிலேயர் காலத்தில் ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அவன் மூலம் 'கருணை மனு' அப்போதய வைசிராய்க்கு அனுப்பப்பட்டது. அவரும் 'கருணை மனுவை' பரிசீலித்து மரணதண்டனை வேண்டாமென தீர்மானித்தார். அதனை அப்பொழுதய வழக்கப் படி தந்தி மூலம் "HANG HIM NOT, LEAVE HIM" என்று அடித்து அனுப்பினார்.


எதிர் முனையில் அதனை பெற்று எழுதியவன்,
"HANG HIM, NOT LEAVE HIM" என்று கமாவை மாற்றிப்போட்டு டெலிவரி செய்தார். அந்த அப்பாவி கைதியின் முடிவு என்ன ஆகி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?


எழுத்துக்களின் புணர்ச்சி விதி இல்லாத ஆங்கிலத்திலேயே ஒரு கமா செய்தியை எதிர் மறை ஆக்குமெனில்,தமிழில் கேட்கவா வேண்டும்.


எனவே "களவு அகத்து மற" என்பதே பழமொழியாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது அல்லவா.

05. அதிசயம்!!!!!!!

அதிசயம்!!!!!!!
ஆனால் இது
அவசியம்.
இப்படியும் நடக்குமா?

அம்மாவுக்குத் தெரிந்தால்..?

(இந்த செய்தி தினகரனிலிருந்து எடுக்கப்பட்டது)

Related Posts with Thumbnails