Showing posts with label பழமொழி. Show all posts
Showing posts with label பழமொழி. Show all posts

26.மெய்ப் பொருள் காண்பது அறிவு- 4

பணம் இல்லாத காரணத்தால் பிரச்சனையில் இருப்பவ‌ர்களும், தோல்வியைத் தழுவியவ‌ர்க‌ளும் சலித்துக் கொண்டு சொல்லும் பழமொழி,"பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே." பணம் படைத்தவ‌ர்களுக்கு முதல் ம‌ரியாதை தந்து, நல்ல குணம் படைத்தவ‌ர்களை அவம‌ரியாதை செய்யும் 'பண'நாயக ஆட்சி நடக்கும் இக்காலத்தில் அப் பழமொழியின் நேரடி அர்த்தத்தை ஏற்றுக் கொள்ளலாம்.




நாடி வந்தவ‌ர் ஆண்டியாயினும், அவ‌ர் வாடி விடாமல் இருக்க, கட‌ன் வாங்கியாவது வடித்துக்கொடுக்கும் விருந்தோம்பலில் முதலிடம் வகித்த பழந்தமிழகத்தில் இப்பழமொழி வேறு அர்த்தத்தில் வழங்கி இருக்கலாமில்லையா?

ஒரு நடுத்த‌ர‌ குடும்பம் என்றால் அவ‌ர்க‌ளது சைவ‌ விருந்து வடை பாயாச‌த்துடன் முடிந்துவிடும்.

சற்று வ‌ச‌தியான குடும்பம் என்றால் வ‌ழ‌க்க‌மான் ஐட்ட‌ங்க‌ளுடன், ஐஸ்கிரீம், சூப், ப‌ழம் என்று எக்ஷ்ட்ரா‌ ஐட்ட‌ங்கள் காணும்.

அதுவே வ‌ச‌தியான‌வ‌ர்க‌ளது விருந்தானால் எண்ண முடியாத‌ அள‌விற்கு மெனு இருக்கும். பஃபே யில் எதைவேண்டுமான‌லும் எடுத்து சாப்பிட‌லாம்.

எனவே ஒருவர் வீட்டு ப‌ந்தியை(விருந்தை)ப் பார்த்தே அவ‌ர்க‌ளின் வ‌ச‌தியை ம‌திப்பிட‌லாம்.

ஏழை அவ‌னுக்கேற்ற‌ எள்ளுருண்டையை ப‌ந்தியிலே வை‌க்கிறான்.

இருக்கிற‌வன் இலையிலே வ‌ச‌தியைக் காட்டுகிறான்.

எனவே ஒருவ‌னது வ‌ச‌தியை (ப‌ணம்) விருந்திலே காண‌லாம் என்ப‌தையே ப‌ணம் ப‌ந்தியிலே (காண‌லாம்) என்று சொல்லியிருக்க வேண்டும்.

அப்ப‌டியானால் குப்பையிலே போயா குண‌த்தைத் தேட முடியும்?
பணத்திற்காக குண‌த்தை தூக்கி குப்பையிலே போடு என்ப‌துதான் ச‌ரியாக‌ இருக்குமா?

நண்பர் ஒருவ‌ரது திரும‌ணம் திருச்சியில் ந‌ட‌ந்தது. நான் முதல் நாளே சென்றிருந்தேன்( ப‌ந்திக்கு முந்த‌தான்). அவரது அலுவ‌ல‌க‌ நண்பர்க‌ளும் சென்னையிலிருந்து முதல் நாளே வ‌ந்திருந்த‌னர்.

அன்று பகல் முழுவ‌தும் ஊரைச் சுற்றிக்காட்ட, என் ந‌ண்பன் அவ‌ர‌து தூர‌த்து உற‌வினர் ஒருவரை அழைத்து, "மாமா! இவ‌ங்கள த‌னியா அனுப்பினா போற‌ எட‌ம்லா பிர‌ச்சனை ப‌ண்ணிட்டு வ‌ந்துடுவானுங்க. அப்றம் ந‌ம்மப் பேரு கெட்டுப் போயிடும். அத‌னால‌ அவ‌ங்க கூட‌ ஊரை சுத்திக் காட்ற சாக்குல நீங்கப் போயிட்டு வாங்க" என்றான்.

அவ‌ரும் திருமண வேலையெல்லாம் அம்போன்னு விட்டுட்டு வாலிபக் கூட்ட‌த்தோட‌ ஐக்கிய‌மாக்கிக் கொண்டார்.

அன்று இரவு "எங்கேல்லாம் போனிங்க?" என்று அவரை விசாரித்தேன்.என்னப்பா, friends ப்ப‌த்தி இப்படி சொல்லிட்டான். எல்லாம் ந‌ல்லப் ப‌ச‌ங்க‌ப்பா. முக்கொம்பு போவ‌லான்னா, கோயிலுக்கு கூட்டிப் போகச் சொன்னாங்க‌ப்பா. அப்றம் ம‌லைக்கோட்டை, ஸ்ரீர‌ங்கம், வ‌ய‌லூர்னு சுத்திட்டு வ‌ர்றோம்" என்றார்.

பெருசுகள் சீட்டுக் க‌ச்சேரியைத் துவ‌ங்க, இள‌சுகள் பாட்டில் க‌ச்சேரியை ஆர‌ம்பித்த‌னர். நண்ப‌ர்கள் அனைவ‌ரும் வ‌ட்டம் க‌ட்டி தரையில் உட்கார்ந்திருக்க‌,ஒருவர் ம‌ட்டும் நாற்காலிப் போட்டு ஓர‌மாக‌ அம‌ர்ந்திருந்தார். அவர் கையில் fanta பாட்டில்!. நானும் மாமாவும் அந்த‌ அறையைக் க‌ட‌க்கும் போது இக்காட்சியைக் க‌ண்டோம்.

நான் வ‌லியச் சென்று, "ஏன். அவரு பார்ட்டியில க‌ல‌ந்துக்க‌லயா? இன்னைக்கு விர‌த‌மா" என்றேன் கேலியாக‌.

"யாரு, சுரேஷா?, அவ‌ன் pant ப்போட்ட சாமியாருங்க. எங்க gangல சேர்ந்து வ‌ந்திர்க்கிறதே அதிச‌ய‌ங்க" என்றார் பாட்டில் ப‌ங்கீட்டாளர்.

"இன்னைக்கு ஒரு நாள் பார்டியில‌வாவது, 'friend டோட சுத‌ந்திரம்' ப‌ரிபோறத நினைச்சி க‌ல‌ந்துக்க‌லாம்ல" என்றேன்.

"அட நீங்க‌ ஒண்ணு, வரும்போது பாண்டி(புதுச்சேரி) வந்துட்டு வந்தோம், அங்க 'அந்தக் கடல்லயே' காலநனைக்காம வந்தவன், இந்த 'காவேரி தீர்த்தத்ல'யா குளிக்கப் போறான்" என்றார் அவர் ந‌ண்பர்.

"சரி! சரி! அவரு ந‌ல்லவராவே இருந்துட்டுப் போகட்டும். அவர compel பண்னாதீங்க‌" என்று சொல்லி திரும்பி நடந்தேன்.

அவ‌ர்கள் பேச்சின் அர்த்தம் புரியாம‌ல் என்னை 'ஙே' என்று பார்த்தார் மாமா.
"என்ன சொல்றாங்க‌, குளிச்ச‌ப்ப‌ற‌மாதன் பீர் குடிப்பாராமா?" என்றார் அப்பாவியாக‌.வந்த சிரிப்பை அட‌க்கிக் கொண்டு அவ‌ர்க‌ளின் பேச்சில் இருந்த 'உள்குத்தை" புரிய வைத்தேன்.

மறுநாள் திரும‌ணம் முடிந்து அனைவ‌ரும் புற‌ப்ப‌ட்டுக் கொண்டிருந்தனர். நண்பர் குழாம் காலையிலேயே இடத்தை காலி செய்துவிட்டிருந்தது.நானும் விடைபெற புது மாப்பிள்ளையிடம் சென்ற போது, அவனது மாமாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.
"என்ன சொல்றார் மாமா?" என்றேன்.
அதற்கு அவரே என்னிடம்" அது ஒண்ணுமில்ல தப்பி! இவனோட friend சுரேஷ் இருக்கன் பாரு அவனைப் பத்தி விசாரிச்சிட்டு இருக்கேன்.
என் அண்ணன் பொண்ணு படிச்சுட்டு கல்யாணத்துக்கு காத்திகிட்டு இருக்கா. அதுதான் தோதுபட்டு வருமான்னு பார்க்கிறேன்"

"என்ன மாமா! பாத்த ஒரு நாள்ளவே அவரு நல்லவருன்னு முடிவு பண்ணிட்டீங்களா?" இது நான்
"பார்டா, நான் கூட குடிக்க மாட்டேன்னு நல்லாத்தெரியும். மாமா அந்தப்பொண்ண எனக்கு கொடுக்க நினைச்சாராப் பாரு" என்றான் நண்பன்.
"அத இனி யோசிச்சு என்ன பண்றது. உன் தலைவிதியத்தான் முடிவு பண்ணியாச்சே காலையிலேயே" கிண்டலடித்தேன் நான்.

உடனே மாமா விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்,"இல்ல மாப்ள! நீங்க குடிக்கிலங்கிறது வேற.மெட்றாஸ்ல சித்தப்பா வீட்ல இருந்துகிட்டு வேலைக்குப் போயிட்டு வர்ரீங்க.வேலை முடிஞ்சு வரவே நைட்டாயிடுது.வெளிய சுத்த நேரமே இல்ல. உங்களுக்கு இதுபோல ஒரு சான்ஸ் வந்தா எப்படி நடந்துப்பிங்கன்னு எங்களுக்கு தெரியாதில்ல.
குடிக்காதவங்க மத்தியில இருந்துகிட்டு குடிக்காம இருக்கிறது பெருசு இல்ல.
நேத்தி அந்தப் பையன கட்டுப் படுத்த யாருமில்ல. போதாதுக்கு friends வேற கம்பல் பண்றாங்க, அப்படியும் குடிக்கலன்னா, எப்பவும் குடிக்க மனசு வராது தம்பி."

"அது எப்படி மாமா இவ்வளவு நம்பிக்கையா சொல்றீங்க?"

"தம்பி! என் மாப்ள நல்லவனா இருக்கலாம்.ஆனா அவன எப்போவும் நல்ல பசங்கக்கூடயே (this include me also!) பார்க்கறததால அவனோட உண்மையான குணம் தெரியல, ஆனா குப்பைக்கு மத்தியில மாணிக்கம் ஜொலிகிறதப் போல குடிக்கிறவங்க மத்தியில அந்தப்பையனோட குணம் பளிச்சுன்னு தெரிஞ்சுது.
சிலப்பதிகாரத்துல கற்புக்கரசி கண்ணகிக்கு ஈடா மாதவிய ஏன் பேசறாங்கன்னா, அவ பரத்தை குலத்துல பிறந்தும் ஒருவனுக்கு ஒருத்தின்னு வாழ்ந்தா.
அவ நினைச்சா யார் கூட வேணாலும் போயிருக்க முடியும். அவளுக்கு அப்படி ஒரு சுதந்தரத்த சமூகம் கொடுத்து இருந்தது. ஆனா அவ போகல. அங்கதான் அவளோட குணம் நிக்குது. தப்பு பண்ண சந்தர்ப்பம் இருக்கும் பரத்தை குலம்ங்கிற குப்பைகளுக்கு நடுவே இருந்தும் தப்பு பண்ணாததால ஜொலிச்சா" என்று பெரிய லெக்சர் அடித்தார் மாமா.

நண்பன் மிரண்டுப் போய் எங்களைப் பார்க்க, நானும் என் பங்குக்கு
"ஆமாம் மாமா, வெள்ளைப் பேப்பர்ல வெள்ளை sketchசால எழுதினா சரியாத் தெரியாது, கருப்புப் பேப்பர்ல வெள்ளை sketchசால புள்ளி வச்சாலே பளிச்சுன்னுத் தெரியும். அதுமாதிரி Backgroundதான் படத்த எடுப்பா காண்பிக்கும்னு சொல்றீங்க" என்று தத்துவத்தை எடுத்து விட்டேன்.

நண்பன், அப்போ குப்பையிலதான் குணத்த தேடுனும்னு சொல்றீங்க?" என்று கேட்டான்.

"இல்ல, இல்ல, குப்பையிலதான் குணம் பளிச்சுன்னு தெரியும்ங்கிறேன்" மாமா விளக்கம் கொடுத்தார்.

அப்போதுதான் இந்த பழமொழி எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.
குணத்தை குப்பையிலே போட சொல்லியிருக்க மாட்டாங்க, குப்பையில பளிச்சுன்னுத் தெரியும்னு சொல்லிருருப்பாங்கன்னு தோணிச்சு.

ஆக இந்தப் பழமொழியை , பணம் (செல்வாக்கு)பந்தியில் தெரியும், குணம் குப்பையில் (தப்பு பண்ணும் வாய்ப்புகளுக்கிடையே) தெரியும் அப்படிங்கிற பொருளில் கூட சொல்லியிருக்கலாமில்லையா?



பின் குறிப்பு: மாமா சென்றவுடன் நண்பனிடம் நான் ஒரு சந்தேகம் கேட்டேன்,"ஏண்டா? உங்க மாமா வீட்ல கல்யாணத்துக்கு தயாரா ஒரு பொண்ணு இருக்குன்னு friends கிட்ட முன்னாடி எப்பவாது சொல்லிருந்தியா?"

10.மெய்ப்பொருள் காண்பதறிவு - 3



மெய்ப்பொருள் காண்பதறிவு - 3


"பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து" என்ற பழமொழியை திருமண வீட்டில் அடிக்கடி கேட்டிருக்கலாம்.
எங்கே கடைசி பந்திக்குப் போனால் ஜாங்கிரியும், மைசூர்பாகும் தீர்ந்து விடப் போகிறதோ என்ற கவலையும்; ரசமும்,மோரும் தீரத் தீர, நீர்த்துப் ( தண்ணீர் விட்டு பெருக்கிக்கொள்வதால்) போய்விடும் கவலையிலும் முதல் பந்திக்கே போய் விட்டால் அனைத்தையும் ஒரு பிடி பிடித்து விடலாம் என்போரின் தாரக மந்திரம் அது.

ஆனால் நினைத்துப் பாருங்கள், விருந்தோம்பலில் புகழ்பெற்ற நம் தமிழ் நாட்டில், அதுவும் தமிழகம் செழித்திருந்த அந்த காலங்களில் இப்படி ஒரு கருத்தையா சொல்லியிருப்பார்கள்?

ஒரு திருமணத்திற்குச் சென்ற எனக்கு இரு அனுபவங்கள் ஏற்பட்டது. மணமகன் தாலி கூட கட்டவில்லை, இலை போட்டாயிற்று என்று ஒருவர் சொன்னதுதான் தாமதம். திமுதிமுவென்று ஒரு கூட்டம் அடித்து பிடித்துக் கொண்டு ஓடி இடம் பிடித்தது சாப்பிட. விசாரித்தபோதுதான் அவசரத்திற்கான காரணம் புரிந்தது. திருமணம் முடிந்து அவர்களுக்கு அலுவலகம். பள்ளி செல்ல வேண்டியிருந்ததால் சீக்கிரம் வந்த வேலையை முடித்துக்கொண்டு புறப்படலாமே என்பதுதான்.

நமக்கு அப்படி ஒன்றும் வெட்டி புரட்டும் வேலையில்லாததால் மெதுவாக சாப்பிட செல்லலாமென அமர்ந்து வேடிக்கை (?) பார்த்துக் கொண்டிருந்தேன்.
அடுத்த பந்திக்காக சாப்பிட கூப்பிட வந்தவர்,"சாப்பிடாதவங்க வாங்க! அடுத்த பந்தி ரெடி!" என்று கூறிவிட்டு, எனக்கு தெரிந்தவர் ஆதலால், "வாங்கண்ணே! இலை போட்டாச்சு" என்றார் என்னைப் பார்த்து.

எனக்கு பக்கதில் இருந்தவரும் அவருக்கு தெரிந்தவர் போலிருக்கிறது. அவரையும்,"மாமா எந்திரிங்க, சாப்பிட போகலாம்" என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். நான் எழுந்து அவரையும் கூப்பிட்டு விட்டு அதற்கு அடுத்தாற் போல உட்கார்ந்திருந்த பெரியவரையும், "வாங்க போகலாம்" என்று அழைத்தேன்.

உடனே அவர் "நான் என்ன சாப்பாட்டிற்கு இல்லாமல் இங்கு வந்தேன் என்று நினைத்துக் கொண்டீர்களா?" என்றார் கோபத்தில்.
"என்ன தாத்தா இப்படி பேசறீங்க? சாப்பிட வாங்கன்னுதானே கூப்பிட்டேன்!" என்றேன்.
"நீ கூப்பிட்டா சரியா போச்சா? இங்கே வரிசையிலே நாம மூனுபேரும் உட்கார்ந்திருக்கோம், இப்ப வந்த ஆளு உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டுவிட்டு, குத்துக் கல்லாட்டம் உட்கார்ந்திருக்கிற என்ன கண்டுகாத மாதிரி போறான். 'வாங்க தாத்தா சாப்பிடலாம்னு' ஒரு வார்த்தை மரியாதைக்கு என்னையும் கூப்பிடமப் போறான் பார்த்தேல்ல." என்றார் வெகு ஆவேசமாக. அவரை சமாதனப் படுத்தி சாப்பிட வைக்க நான் படாத பாடு பட வேண்டி இருந்துது.

இந்தப் பெரியவருக்கே இப்படி கோபம் வருகிறதே! அலுவலக்த்திற்கோ, பள்ளிக்கோ அடித்துப்பிடித்துக் கொண்டு போக வேண்டிய அவசரமில்லாத அந்தக்காலத்தில் பந்திக்கு முந்திக்கொண்டா போய் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள்?


ஒரு வீட்டில் திருமணம், விசேஷம் என்றால் இப்போது வெகுசுலபமாகப் போய் விட்டது. அனைத்திற்கும் ஒப்பந்தக்காரர்கள் உண்டு. ஒரு மண்டபத்தை ஏற்பாடு செய்து விட்டு ஒப்பந்தக்காரரிடம் பணத்தையும் கொடுத்துவிட்டால் கையைக் கட்டிக் கொண்டு கக்கத்தில் பணப் பையை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தால் போதும். சாப்பாடு, சமையலிலிருந்து Table Cleaning வரை எதெற்கெடுத்தாலும் அதற்கு ஆள் உண்டு. அதுவும் இப்போது இருந்த இடத்திலிருந்தே தொலைப்பேசியை அழுத்தினால் போதும், அனைத்திற்கும் ஆள் ரெடி.

முன்பு அப்படி இல்லை. எவ்வளவு பெரிய விசேஷமாக இருந்தாலும் வீட்டில்தான். திருமணம் என்றால் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல தெருவில் உள்ள அனைவரும் ஆளுக்கொரு வேலையை எடுத்துக் கொண்டு செய்வார்கள். அப்போதுதான் அந்த விருந்தை சிறப்பாக செய்து முடிக்க முடியும்.

பந்தி ஏற்பாடு செய்யவேண்டுமானால் முதலில் இலை நறுக்கி, இலைப்போட்டு, இருக்கைப் போட்டு SIDE DISH களை பரிமாற வேண்டும். வீட்டில் உள்ளவர்களால் மட்டும் இதை செய்து கொண்டிருக்க
முடியுமா? அதற்கு மற்றவர்கள் முன்னால் சென்று உதவ வேண்டும்.

இந்த 'தானே சென்று உதவும்' பண்பு தேவை என்பதற்குத்தான் "பந்தியிலே முந்தி" இருந்து பரிமாற வேண்டும் என்று கூறப்பட்டிருக்க வேண்டும்.

அது சரி, "படைக்கு பிந்து" என்பதில் வேறு என்ன கருத்து இருக்க முடியும்?
படையெடுப்பு என்றால் வீட்டுக்கு ஒருவரை வாழ்த்தி திலகமிட்டு அனுப்பும் வீர பரம்பரை அல்லவா நம்முடையது. வீரம் என்பது ஆணின் அழகுக்கு இலக்கணமாக கூறிய சமுதயம் அல்லவா? பின் ஏன் படைக்கு பிந்த வேண்டும்?

படைகளில் பல பிரிவு உண்டு. அதில் முன்னர் செல்வது காலாட்படை. அதைத்தொடர்ந்து குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை எனச்செல்லும். முதலில் செல்லும் காலாட்படையில் ஆட்கள் அதிகம். அவர்கள் எதிரியால் தாக்கப்பட்டாலும், பின்னர் வரும் தேர்படைகளில் இருக்கும் வீரர்கள் வெற்றி வாகையினைத் தேடித்தருவார்கள். தேர்படையில் இடம் பெற பல போர்களைக் கண்டு, வீரத்தை நிறுபித்து இருக்க வேண்டும்.
சாதரண வீரர்களுக்கு அதில் இடமில்லை.

நாம் காக்கைக்கு சோறு போட்டு சோதித்து விட்டு சாப்பிடுவதில்லையா?
சாப்பாட்டில் விஷமிருந்தால் தெரிந்து விடும். காக்கையை விட நமது உயிரை மேலாக மதிப்பதினால் தானே அப்படி செய்கிறோம். அது போல வெறும் 'காக்கை வீரர்களாய்', 'வெறும் காலாட்படை' வீரனாக இருந்தால் மட்டும் போதாது, வீரத்தையும் திறமையையும் காண்பித்து பின்னால் வரும் தேர் படைகளில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை குறிப்பதே "படைக்குப் பிந்து" என்பது.

இதிலிருந்து அந்த பழமொழியின் உண்மையான பொருள், தற்போது நாம் நினைப்பது போல் இருந்திருக்காது என்பது தெரிகிறது அல்லவா!

06.மெய்ப் பொருள் காண்பதறிவு - 2


மெய்ப் பொருள் காண்பதறிவு - 2

"களவும் கத்து மற" இந்தப் பழமொழியை பல நேரங்களில் நாம் சொல்லியிருப்போம். ('கற்று' என்பது 'கத்து' என்று பேச்சுவழக்கில் சொல்லப்படுகிறது). முக்கியமாக மாணவர்களிடம், அவன் வேண்டாம் என்று சொல்லும் சப்ஜெக்டை படிக்க வைக்க டானிக்காக இந்த வார்த்தைகளைப் பயன் படுத்துவோம். ( அதே சமயம் அவன் வேண்டாத பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் போது நாம் தண்டிக்கப் போனால் அவனும் அதே அஸ்திரதைப் பயன் படுத்தி தப்பிக்கவும் பார்க்கலாம்).

நாம் புரிந்து கொண்டிருக்கும் பொருள்,"திருட்டுத் தொழில் இழிவானது, என்றாலும் அதனையும் கற்றுக் கொள்ள வேண்டும், பிறகு மறந்துவிட வேண்டும்" என கற்றுக் கொள்வதின் சிறப்பினை விள்க்கும் பழமொழியாகத்தான்.


களவு இழிவானது என்றுத் தெரிந்தும் ஏன் அதனை கற்க வேண்டும்?

கற்றலைப் பற்றி சொல்ல வந்த வள்ளுவர் "கற்பவை" என்று கற்க வேண்டியதை மட்டும் கற்க என்றார். பின் "நிற்க அதற்கு தக" என்றுதான் கூறினார். மறக்கச் சொல்லவில்லை. அதோடு மட்டுமல்லாமல் "கள்ளாமை" பற்றி ஒரு அதிகாரமே எழுதியுள்ளார்.


என்வே இழிவான, தேவையில்லாத ஒன்றை ஏன் கற்க வேண்டும், பிறகு அதை மறக்க வேண்டும்?


சாதரணமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று படித்தாலே நாம் எந்த லட்சணத்தில் படிக்கிறோம் என்று தெரியும். இதில் மறந்திட வேண்டும் என்று படித்தால் எப்படி?

எனவே அதன் உண்மைப் பொருள் "களவு அகத்து மற" என்றுதான் இருந்திருக்க வேண்டும். அதாவது களவினை மனதளவில் (அகம்) நினைத்துக் கூடப் பார்க்காதே, மறந்துவிடு என்பதாகும்.

மற்ற கூடா ஒழுக்கங்களான 'கொலை', 'பிறன் மனை நோக்குதல்', 'சூது', 'மது'போன்ற பழிச்சொல் ஏற்பவற்றில் களவும் ஒன்று, அதனையும் மறக்க வேண்டும் என பொருள் படும் படி "களவும் அகத்து மற" என மாறி, பின் காலப்போக்கில் 'அ' மறைந்து தற்போதய வடிவமான "களவும் கத்து மற"என மாறியிருக்கலாம்.

ஒரு காற்புள்ளி இடம் மாறியதனால் பொருள் எதிர் மறையாகி ஒரு உயிரே பறிபோன கதை ஞாபகம் இருக்கிறதல்லவா? மறந்தவர்களுக்காக அக் கதை மீண்டுமிங்கே:


ஆங்கிலேயர் காலத்தில் ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அவன் மூலம் 'கருணை மனு' அப்போதய வைசிராய்க்கு அனுப்பப்பட்டது. அவரும் 'கருணை மனுவை' பரிசீலித்து மரணதண்டனை வேண்டாமென தீர்மானித்தார். அதனை அப்பொழுதய வழக்கப் படி தந்தி மூலம் "HANG HIM NOT, LEAVE HIM" என்று அடித்து அனுப்பினார்.


எதிர் முனையில் அதனை பெற்று எழுதியவன்,
"HANG HIM, NOT LEAVE HIM" என்று கமாவை மாற்றிப்போட்டு டெலிவரி செய்தார். அந்த அப்பாவி கைதியின் முடிவு என்ன ஆகி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?


எழுத்துக்களின் புணர்ச்சி விதி இல்லாத ஆங்கிலத்திலேயே ஒரு கமா செய்தியை எதிர் மறை ஆக்குமெனில்,தமிழில் கேட்கவா வேண்டும்.


எனவே "களவு அகத்து மற" என்பதே பழமொழியாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது அல்லவா.

03. மெய்ப்பொருள் காண்பதறிவு - 1



மெய்ப்பொருள் காண்பதறிவு

நாம் அடிக்கடி கேள்விப்பட்ட பழமொழிகள் பல தற்போது நாம் புரிந்து கொண்டிருக்கும் பொருளில் தான் சொல்லப்பட்டதா என்பது எனது நீண்ட நாளைய சந்தேகம்.

மறைந்த தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பேச்சின் ஒலிப்பதிவை அண்மையில் கேட்க்க நேர்ந்தது. அதில் அவர் ஒரு பழமொழிக்கு புது விளக்கம் தந்திருந்தார். அதன் வழியே யோசித்துப் பார்த்த போது பலவற்றினுக்கு மெய்ப்பொருள் வேறாக இருக்குமெனத் தோன்றுகிறது.

"அரசனை நம்பி புருஷனை கை விட்டது போல" என்ற ஒரு சொல் நம் நாட்டில் வழங்கி வருகிறது.

அதற்கு நேரடியான அர்த்தமாக நாம் புரிந்து கொண்டிருப்பது: ஒரு பெண் தன் கணவனை விட்டு விட்டு ராஜ வாழ்க்கை வாழ அரசனுடன் சென்று பின் அவனால் அந்த புரத்தில் நூற்றோடு ஒன்றாக தள்ளப் பட்ட போது
'அரசனை நம்பி வந்தது எவ்வளவு தவறு' என்பது புரிய வந்தது என்பதாகும்.


எனவே அரசன் என நினைத்து இருக்கும் புருஷனை கைவிட்டு மற்றவரை நம்பிச் செல்ல வேண்டாம் என சொல்ல வந்தது போல் அந்த பழஞ்சொல்லை நாம் வழக்கத்தில் கையாண்டு கொண்டிருக்கிறோம்.


உண்மையில் அதன் அர்த்தம் வேறு என்பது வாரியார் அவர்களின் வாதம். கற்பில் சிறந்த க்ண்ணகி வாழ்ந்த தமிழ் நாட்டில் பெண்களைப் பற்றி இழிவாக அப்படி ஒரு சொல் ஏற்பட்டிருக்குமா?

பின் அதன் உண்மைப் பொருள்தான் என்ன?


முன் காலத்தில் திருமணமாகியும் குழந்தை பிறக்காத பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வந்தால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருந்துவந்தது. ( அது உண்மை என்றும்,அரசு மற்றும் வேப்ப மரக் காற்றில் உள்ள வாயுமூலக்கூறுக்களை பெண்கள் சுவாசிக்கும் போது கர்ப்பப்பையில் உள்ள கிருமிக்கள் இற்ந்து, கர்ப்பப்பை சுத்தமாகிறது என்பதும் தற்போது அறிவியல் கூறுகிறதாமே!) 'அரச மரத்தை சுற்றி விட்டு அடி வயிற்றைப் பார்த்தது போல' என்று அவசரப்படும் ஜென்மங்களுக்குச் சொல்லப்படும் எடுத்துக்காட்டிலிருந்தும் அரச மர நம்பிக்கையை அறியலாம்.


எனவே குழந்தைப் பேறு வேண்டி ராத்திரிப்பகலாக அரசமரத்தடியிலேயே தவம் கிடக்க ஆரம்பித்து விட்டனர் அக்காலப் பெண்கள். வீட்டில் கணவன் என்று ஒருவன் இருக்கிறான்,அவனது துணையும் இதற்கு அவசியம் என்பதினையும் மறந்து விட்டனர். அவர்களது நம்பிக்கை நடைமுறைக்கு உதவாதல்லவா? இதனைக் குறிக்கவே "அரசை (அரச மரத்தை) நம்பி" என்று இருந்திருக்க வேண்டியச் சொல்"அரசனை நம்பி" என்று மாறி(மருவி)யிருக்க வேண்டும்.

எனவே இனி இப்பழ மொழியை " அரசை நம்பி புருஷனை கை விட்டது போல" என்றே கூறுவோம்.

Related Posts with Thumbnails